போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி? யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி? யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி? யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி என யூ-டியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட முதல் சம்பவத்திலேயே கைதான பரிதாபம். ரிவர்ஸ் கண்காணிப்பு கேமரா பார்முலா மூலம் போலீசார் இருவரை கைது செய்தனர்.

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் கடந்த மாதம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பவுன் நகையை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாங்காடு தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு அவர்களை பிடிக்க சற்று வித்தியாசமான முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் கொள்ளையர்களின் உருவம் சிசிடிவி காட்சிகளில் சரியாக தெரியாது என்பதால் சம்பவம் நடப்பதற்கு முன்பாக அதாவது ரிவர்ஸ் முறையில் 600 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

இந்நிலையில் மாங்காடு தனிப்படை போலீசார் மதுரவாயல், நெற்குன்றத்தை சேர்ந்த விஜய் (29) மற்றும் அவரது நண்பர் நொளம்பூரைச் சேர்ந்த படகோட்டி தமிழன் (35), ஆகிய இருவரையும் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பது கடும் சவாலாக இருந்தது. இருவரும் போலீசில் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபடுவது எப்படி, போலீசார் எந்த தடயங்களை வைத்து செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்கிறார்கள் என யூடியூப் பார்த்து மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சுற்றி வந்துள்ளனர்.

இதையடுத்து ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும்போது உடைகளை மாற்றிய பிறகு கெருகம்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தெருக்களின் வழியாக சென்று ஓர் இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் உடைகளை மாற்றிக் கொண்டு மதனந்தபுரம் அருகே சென்றபோது ஒருவர் இருசக்கர வாகனத்திலும் மற்றொருவர் ஆட்டோவிலும் சர்வ சாதாரணமாக சென்றுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

போலீசாருக்கு சவால் விடும் வகையில் உடைகள் மற்றும் வாகனத்தின் நம்பர் பிளேட்டையும் மாற்றிக் கொண்டு சென்றால் போலீசாரிடம் சிக்கி கொள்ள மாட்டோம் என யூடியூப் பார்த்து அதன்படி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ரிவர்சில் பார்க்கும் முறையை கையாண்டு இருவரையும் லாவகமாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த இருவரும் யூடியூப் பார்த்துவிட்டு முதல் முறையாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதான பரிதாபமும் அரங்கேறி உள்ளது. போதைக்கு அடிமையான இருவரும் செலவுக்காக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com