ஹரியானா: போலீஸார் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்! 16 போலீஸாருக்கு காயம்
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரட்டேவாலி கிராமத்தில் உரிமம் பெற்ற சுரங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைத் தடுக்கச்சென்ற போலீஸாரை மக்கள் கற்கள் மட்டும் செங்கற்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மூன்று பெண்கள் உட்பட 16 போலீஸாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக சுரங்கத்திற்கு மணல் மற்றும் ஜல்லிக்கற்களைக் கொண்டுவந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்திய கிராமமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். அம்மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸார் அது அரசு உரிமம் பெற்ற சுரங்கம் என்று எடுத்துரைத்தும் கிராமத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், வாகனங்களை அனுமதிக்கவேண்டுமானால் அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
மதியம் 1.30 மணியளவில் ரட்டேவாலி கிராமத்திற்குச் செல்லும் வழியை அடைத்திருக்கின்றனர். போராட்டத்தைத் தடுக்கச்சென்ற போலீஸாருக்கும், கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் கைது செய்து ஒரு பேருந்தில் ஏற்றியிருக்கின்றனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீஸ் வாகனத்தின்மீது கற்கள் மற்றும் செங்கற்களை வீசியிருக்கின்றனர்.
வாகனங்கள் சேதமடைந்ததுடன், இந்த சண்டையில் 16 போலீஸாருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் டிஜிபி தலைமையில் அதிகப்படையை வரவழைத்த போலீஸார், கிராமத்தைச் சேர்ந்த 14 பேரை கைது செய்து அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். காயமடைந்த போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.