பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த விவசாயி ரஞ்சித்சிங், தான் வாங்கிய ரூ .4 லட்சம் மதிப்புள்ள கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் கூடுதல் பணம் கேட்டு பணம் கொடுத்தவர்கள் துன்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த ரஞ்சித் சிங் என்ற விவசாயி, ஹர்ஷா சீன கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துக்கொள்ளும் முன்பு ரஞ்சித்சிங் பதிவு செய்த வீடியோவில் சதீந்தர்பால் சிங் மற்றும் ஜாக்ரூப் சிங் என்ற இரண்டு கமிஷன் முகவர்கள்தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். அந்த வீடியோவில், "நான் இரண்டு கமிஷன் முகவர்களிடமிருந்தும் ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தேன், ஆனால் அந்த பணத்தை நான் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். ஆனால் இருவரும் கடன் கொடுப்பதற்காக என்னிடமிருந்து வாங்கிய காசோலைகளை திருப்பித் தரவில்லை, மேலும் கூடுதலாக பணம் கேட்டு என்னைத் துன்புறுத்துகிறார்கள். இதனால்தான் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் சிங்கின் தம்பி பர்தீப் சிங்” எனது அண்ணன் கடனாக பெற்ற ரூ.4 லட்சம் திரும்ப செலுத்தியும் கூடுதலாக பணம் கேட்டு துன்புறுத்தப்பட்டார். அவ்ர்கள் மேலும் ரூ .4 லட்சம் செலுத்துமாறு கேட்டு, கடன்பெறும்போது வாங்கிய காசோலைகளை வைத்துக்கொண்டு என் அண்ணன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாக சொல்லி மிரட்டியுள்ளனர். அதனால்தான் இவர் தற்கொலை செய்துகொண்டார்” என கூறியுள்ளார்.