கூடலூர் | வாடகைக்கு குடியிருந்த பெண் வெட்டிக் கொலை - வீட்டின் உரிமையாளர் போலீசில் சரண்
செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரப் பகுதியில் உள்ள காசிம்வயல் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஜெனிஃபர் கிளாடிஸ். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். நேற்றிரவு வீட்டின் உரிமையாளர் அலி என்பவரது வீட்டிற்குச் சென்ற ஜெனிஃபர் கிளாடிஸ் அவருடன்; வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டின் உரிமையாளர் அலி, கத்தியால் ஜெனிஃபரின் கழுத்து மற்றும் கைகளில் வெட்டியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த ஜெனிஃபர் கிளாடிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கூடலூர் காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தடயங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு அவரது உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக அலி என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். கொலைக்கான காரணம் குறித்து கூடலூர் போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.