’அரை பவுன் நகை, 100 ரூபாய் பணம்’ சிறுவன் செய்த கொடூரம்..பறிபோன மூதாட்டியின் உயிர் !!

’அரை பவுன் நகை, 100 ரூபாய் பணம்’ சிறுவன் செய்த கொடூரம்..பறிபோன மூதாட்டியின் உயிர் !!

’அரை பவுன் நகை, 100 ரூபாய் பணம்’ சிறுவன் செய்த கொடூரம்..பறிபோன மூதாட்டியின் உயிர் !!
Published on

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குவாகம் காலணி தெருவைச் சேர்ந்தவர் லோகிதாஸ் மனைவி சிவகாமி (80). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சிவகாமி தனியாக குவாகம் காவல் நிலையம் அருகே உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் வீட்டில் இருந்த கட்டிலில் சிவகாமி இறந்து கிடந்தார். இதுகுறித்து குவாகம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். உறவினர்கள் தங்களுக்கு யாருடனும் முன்விரோதம் இல்லை ஆகையால் வழக்கு பதிவு எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

மர்மமான முறையில் இறந்த சிவகாமியின் தலையில் லேசான காயம் இருந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் குவாகம் போலீஸார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிவகாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேரில் வந்து புலன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டி அணிந்து இருந்த அரை பவுன் நகைக்காக அருகே வசிக்கும் சிறுவன் ஒருவன் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி அந்த சிறுவனை அவர்களது வீட்டிலேயே வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரை பவுன் நகை மற்றும் 100 ரூபாய் பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.

நகையை தனது தந்தையிடம் கொடுத்ததாக கூறினான். அதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தையிடம் இருந்த மூதாட்டியின் நகையை பறிமுதல் செய்தனர். இவருக்கு 8 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந்த சிறுவன் செல்போன் உள்ளிட்ட பல்வேறு சிறிய திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டபின் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அரை பவுன் நகைக்காக மூதாட்டியை சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com