டியூஷன் படிக்க வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

டியூஷன் படிக்க வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
டியூஷன் படிக்க வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

வேதாரண்யம் அருகே டியூஷன் படிக்க வந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கத்திரிப்புலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக மருதூரைச் சேர்ந்த அசோகன் என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டிமன்ற பேச்சாளராக உள்ள இவர், பள்ளிக்கு அருகில் தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆசிரியர் அசோகனிடம் அந்த பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் டியூஷன் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், டியூஷனில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் அசோகன் வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட 18 மாணவிகள் கடந்த 21 ஆம் தேதி பள்ளி தலைமையாசிரியர் குமாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த புகார் மனுவை தலைமையாசிரியர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள் ஆகியோர் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். இதில், இவரிடம் டியூஷன் படித்த 31 மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் 12 பேர் கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் அசோகனை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் அசோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com