சிவகங்கை அருகே 18 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை இன்று அதிகாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி அருகே உள்ள அச்சரம்பட்டியில் வசித்து வருபவர் சிவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 18 வயது மகள் இருந்துள்ளார். அவர் வாய் பேச முடியாதவர் எனக் கூறப்படுகிறது நேற்று காலை அந்த பெண்ணின் தாய், தந்தை வெளியில் சென்றுள்ளனர். வீட்டில் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
திடீரென சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பெண்ணின் வீட்டுக்கு வந்து பார்த்த போது, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தை ராமநாதபுரம் சரக டிஐஜி காமினி, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்பு சிறுமியின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது பெண்ணின் உடம்பில் ஆங்காங்கே கீறியது போல் காயங்கள் இருப்பதாகவும் , தனியாக இருக்கிறார் என்பதை அறிந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் உரிய பரிசோதனை முடிவிலேயே இது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியும் என கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுமியை கொலை செய்தவர்களை தேடி வந்தனர். மேலும் அந்த ஊரைச் சேர்ந்த பலரிடம் விசாரணை நடைபெற்றுது. இந்நிலையில் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் (27) என்பவரை தனிப்படை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். மேலும், எங்கே தங்களை அடையாளம் காட்டி விடுவாரோ என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரை கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.