\
‘கார்... பைக்.. கலர்ஃபுல் ட்ரெஸ்.’ : கொள்ளையடித்த மாணவர்களின் சொகுசு வாழ்வு..!

‘கார்... பைக்.. கலர்ஃபுல் ட்ரெஸ்.’ : கொள்ளையடித்த மாணவர்களின் சொகுசு வாழ்வு..!

‘கார்... பைக்.. கலர்ஃபுல் ட்ரெஸ்.’ : கொள்ளையடித்த மாணவர்களின் சொகுசு வாழ்வு..!
Published on

தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி 20 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த பொறியியல் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பட்டதாரி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மதுரவாயலில் உள்ள தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் பணம் வசூலிப்பவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மதுரவாயல் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சென்றிருக்கிறார். அப்போது எதிரே மோட்டார் சைக்களில் வந்த அடைய‌ளம் தெரியாத நபர்கள் மணிகண்டனை மறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்திருக்கின்றனர். மேலும் மணிகண்டனை கத்தியால் குத்தி காயப்படுத்தியிருக்கின்றனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததையடுத்து மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கிட்டத்தட்ட 7 மாதங்களாக இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இதனிடையே மதுரவாயல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருநெல்வேலியை சேர்ந்த சேகர், மூர்த்தி தட்சணாமூர்த்தி, மணிகண்டபூபதி, வேலப்பராஜா, ஆகிய நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மதுரவாயலில் மணிகண்டனை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மூலமே கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான மணிகண்டபூபதி தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். தட்சணாமூர்த்தி டிப்ளோமா இன்ஜினீயர். வேலப்பராஜா சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார்.

கொள்ளையடித்த பணத்தில் சொகுசு காரும், விலை உயர்ந்த பைக்கும் வாங்கியுள்ளனர். தொடர்ந்து கொள்ளையடித்த பணம் மூலம் விதவிதமான உடைகளை அணிந்து கெத்தாக வாழ்ந்துள்ளனர் இவர்கள். இவர்களிடமிருந்து கார், பைக்குகள், இரண்டு லட்சம் ரூபாய் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கொள்ளை நடந்து ஏழு மாதங்கள் கடந்ததால் கொள்ளையர்களிடமிருந்து முழு பணத்தையும் போலீசாரால் மீட்க முடியவில்லை. கொள்ளையர்கள் மீது நெல்லை மாவட்டம் டவுன் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com