விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மின் மோட்டாரை திருடியதாக 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மின் மோட்டாரை திருடியதாக 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மின் மோட்டாரை திருடியதாக 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

மும்பை ஸ்டைலில் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாட விவசாய மின் மோட்டாரை திருடி விற்க முயன்ற கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் குன்னத்தூரில் உள்ளது. அதில், மின் மோட்டாருடன் கூடிய கிணறும் உள்ளது. இந்நிலையில், வருகின்ற 10ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், மும்பையில் கொண்டாடுவதுபோல் குன்னத்தூர் கிராமத்தில் வெகுவிமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ராஜ்குமார் அவரது நண்பர் காளிமுத்து மற்றும் சிறுவர்கள் இருவர் என நான்கு பேர் சேர்ந்து முடிவு செய்தனர்.

இதையடுத்து விழாவை சிறப்பாக நடத்துவதற்கு போதிய பணத்தை தயார் செய்ய அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த இரண்டு மின் மோட்டார்களை திருடிய நான்கு பேரும் சேர்ந்து அதை உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு இரும்பு கடையில் விற்பதற்காக கொண்டு வந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது விவசாய மின் மோட்டாரை திருடி வந்த வாகனத்தை மறித்து விசாரித்தபோது, நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னதால் சந்தேகமடைந்த போலீசார், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நால்வரும் மின் மோட்டாரை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருநாவலூர் போலீசார் பட்டதாரி இளைஞர் ராஜ்குமார் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் சிறுவர்கள் இருவரையும் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விழுப்புரம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com