கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் வெட்டிக் கொலை: 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
காரைக்குடியில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை கொலை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (48). இவர், காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பதோடு வட்டி பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் காரைக்குடி மின்வாரிய அலுவலகம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடம் சென்று லட்சுமணன் உடலை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்டு இறந்த லட்சுமணன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாகவும், அவரிடம் பணம் வாங்கிய பிரகாஷ் என்பவரை, வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷின் சகோதரர் மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமணனை வெட்டிக் கொலை செய்து தெரியவந்தது. இதனையடுத்து, மணிகண்டன் உட்பட, 17 வயதே ஆன மூன்று சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.