சிறுமி கடத்தல்... ஒரு மணிநேரத்தில் மீட்ட காவல்துறை; சிக்கிய ஆட்டோ - நடந்தது என்ன?

சிறுமி கடத்தல்... ஒரு மணிநேரத்தில் மீட்ட காவல்துறை; சிக்கிய ஆட்டோ - நடந்தது என்ன?
சிறுமி கடத்தல்... ஒரு மணிநேரத்தில் மீட்ட காவல்துறை; சிக்கிய ஆட்டோ - நடந்தது என்ன?

சிட்லப்பாக்கம் அருகே கடத்தப்பட்ட சிறுமி ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டதாக பள்ளிக்கரணை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட, செம்பாக்கம், திருமலை நகர் முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வினோத். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நான்கரை வயது பெண் குழந்தை வர்ஷா வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியுடன் இரண்டு ஆண் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், சிறுமியை மட்டும் ஏற்றிக்கொண்டு, சிறுவர்களை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்த தகவல் அறிந்த சிறுமியின் தந்தை வினோத் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை எச்சரிக்கைப்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட அறிவுறுத்தினார். அதனடிப்படையில் சிட்லபாக்கம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடி வந்தனர்.

சேலையூர், கேம்ப் ரோடு, வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமாக உட்புற சாலைகளில் ஆட்டோவில் சிறுமியை வைத்து சுற்றி வந்த மர்ம நபர், இரண்டு இடங்களில் சிசிடிவியில் சிக்கியுள்ளார். அதன் பிறகு குரோம்பேட்டை எம்.ஐ.டி.மேம்பாலம் அருகே சிறுமியை கடத்திக்கொண்டு சென்றபோது போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமைக் காவலர் ஜலேந்திரன், முதல் நிலை காவலர் முத்துகுமார் ஆகியோர் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் சிறுமியின் புகைப்படத்தை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உறுதி செய்தப் பின்னர் போலீசார் சம்பவ இடம் சென்று கடத்திய நபரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம், போலீசார் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நேரில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த சம்சுதீன் (34) என்பதும், அவர் சிட்லபாக்கம் காவல் நிலைய சி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

மேலும் சிறுமியை கடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, “சிறுமி 5.15 மணியளவில் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக கமிஷனர், தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை உஷார்படுத்தினார்.

அதன்பேரில், இரண்டு இடங்களில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தேடிவந்த நிலையில், எம்.ஐ.டி.பாலம் அருகே போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து மீட்டனர். கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டார்” என்று கூறினார். கடத்தலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com