இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் ஷர்மா. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய இவர், 2007-ல் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரில், சிறப்பாக பந்து வீசி இந்தியா வெற்றி பெற வழிவகுத்தவர். இப்போது ஹிசாரில் டிஎஸ்பியாக பணியாற்றுகிறார்.
இவரது தந்தை ஓம் பிரகாஷ் ஷர்மா. ஹரியானாவில் உள்ள ரோட்டாக்கில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார் பிரகாஷ் ஷர்மா. சனிக்கிழமை இரவு 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் கடையில் கூல் டிரிங்க்ஸ் கேட்டனர். குடித்துவிட்டு சென்றனர். பின்னர் திடீரென்று திரும்பிய அவர்கள், ஓம் பிரகாஷ் சட்டைப் பையில் இருந்து பணத்தை பிடுங்கினர். அவர் தடுத்தார். அப்போது ஒருவன் கத்தியால் அவர் வயிற்றில் குத்தினான். வலியோடு அவர்கள் இருவரையும் அவர் பிடித்தார். ஆனால் அவர்கள் கல்லாவில் இருந்த ரூ.7 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அதற்கு முன் கடையின் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து ரத்தக் காயத்துடன் அவரது இன்னொரு மகன் தீபக்கிறகு போன் செய்தார். அவர் விரைந்து வந்து கதவை திறந்து ஓம் பிரகாஷை மருத்துவமனையில் சேர்த்தார். இப்போது நலமாக இருப்பதாக தீபக் தெரிவித்துள்ளார்.