சென்னையில் பிரபல ரவுடி சுற்றிவளைத்து கைது: துப்பாக்கிச் சூட்டில் சப் இன்ஸ்பெக்டர் காயம்

சென்னையில் பிரபல ரவுடி சுற்றிவளைத்து கைது: துப்பாக்கிச் சூட்டில் சப் இன்ஸ்பெக்டர் காயம்
சென்னையில் பிரபல ரவுடி சுற்றிவளைத்து கைது: துப்பாக்கிச் சூட்டில் சப் இன்ஸ்பெக்டர் காயம்

போரூர் அருகே சொகுசு காரில் வந்த பிரபல ரவுடி சிடி மணியை போலீசார் சுற்றிவளைத்தபோது, ரவுடி சப் இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சிடி மணி (என்ற) மணிகண்டன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில், கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த இவர், ரவுடி ஒருவரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சிடி மணி எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை நாவலூர் பகுதியில் சிடி மணி பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற சிடி மணியை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து சிடி மணி அங்கிருந்து தப்பினார்.

இதையடுத்து போரூர் அருகே காரில் வந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது போரூர் மேம்பாலம் அருகே வந்த சொகுசு காரை மடக்கினர். அதில் சிடி மணி இருப்பதை அறிந்த போலீசார் அவரை வெளியே வரும்படி கூறினர். ஆனால், காரில் இருந்து சிடி மணி இறங்காமல் காருக்குள் இருந்தபடியே துப்பாக்கியால் சுட்டார்.

இதில், காரின் கண்ணாடியை துளைத்த தோட்டா அங்கு நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கையில் பாய்ந்தது. இதனால் அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிடி மணி அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் போலீசார் விடாமல் சிடி மணியை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் தப்பியோட முயற்சித்தபோது கீழே விழுந்ததில் கை, கால் ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிடி மணி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிடி மணியிடம் இருந்து சொகுசு கார் மற்றும் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com