`10 லட்சம் இல்லனா பரவால... 2 லட்சமாவது கொடுங்க’- காவல்துறை வலையில் சிக்கிய போலி அதிகாரி!

`10 லட்சம் இல்லனா பரவால... 2 லட்சமாவது கொடுங்க’- காவல்துறை வலையில் சிக்கிய போலி அதிகாரி!
`10 லட்சம் இல்லனா பரவால... 2 லட்சமாவது கொடுங்க’- காவல்துறை வலையில் சிக்கிய போலி அதிகாரி!

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் தரமணியில் உள்ள தலைமை நீர்வளத்துறை அலுவலகத்தில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்துள்ள புகாரின்படி, கடந்த 23ம் தேதி அசோகன் தரமணி அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் அனிந்து வந்த ஒருவர் அசோகனிடம் `நான் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர். உங்கள் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் வந்துள்ளது’ என்று கூறியதாகவும், அதற்கு அசோகன் `நான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை’ என்று கூறியதை தொடர்ந்து அந்நபர் தன்னை உண்மையான லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போல் காட்டிக்கொள்ள சத்தம் அதிகமாக பேசியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவரை யாரும் மதிக்கவில்லை என்று கத்தி பேசியுள்ளார். அதிகார தோரணையில் அவர் கத்தியதை பார்த்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் உண்மையான அதிகாரி என்று நினைத்து அவரை கவனித்துள்ளனர். அதன்பின் அந்த போலி லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி, அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்திருக்கிரார். பின் அலுவலகத்திலிருந்து நீர்வளத்துறை அதிகாரி அசோகன் காரில் அவரை அழைத்துக்கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்று அவரது வீட்டிலும் சோதனை செய்துள்ளார் போலி அதிகாரி.

ஒரு கட்டத்தில் நீர்வளத்துறை அதிகாரி மீதுள்ள புகாரை, விசாரிக்காமல் இருக்க பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என கூறும் இவர் லஞ்சம் கேட்பதும், உடன் யாரும் இல்லாமல் தனியாக வந்துள்ளதும் நீர்வளத்துறை அதிகாரிக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் நீர்வளத்துறை அதிகாரியின் சகோதரர் காவல்துறை டிஎஸ்பியாக இருப்பதால், மனைவியிடம் கூறி டிஎஸ்பிக்கு தகவல் தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் யாரேனும் சோதனைக்கு வந்துள்ளனரா என்பதை உறுதி செய்யும்படி கூறியுள்ளார்.

பின்னர் வீட்டிலிருந்து நீர்வளத்துறை அதிகாரி அசோகனை அழைத்துக்கொண்டு அவரது வங்கி கணக்கு வைத்துள்ள சிந்தாரிப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு இவர்கள் செல்வதற்கு முன்பு நீர்வளத்துறை அதிகாரியின் மனைவி முன்னதாக வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து தனது கணவர் மற்றும் அவருடன் யார் வந்தாலும் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் வங்கிக்கு போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியும் நீர்வளத்துறை அதிகாரியும் சென்றுள்ளனர். அங்குள்ள வங்கியின் அதிகாரியிடம் இவரது கணக்கில் இருந்து ரூபாய் 10 லட்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு வங்கி அதிகாரி இவரது கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டுமென்றால் அவரது மனைவி வரவேண்டும் ஏனென்றால் இது ஜாயின்ட் அக்கவுண்ட் என கூறியுள்ளார்.

அப்பொழுது அந்த போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி, `10 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் பரவாயில்லை, 2 லட்சமாவது கொடுங்கள்’ என்று கேட்க அதற்கு வங்கி அதிகாரியோ, ஒரு ரூபாய் கூட அவரது மனைவி இல்லாமல் எடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வங்கியிலிருந்து வெளியேறிய அவர் ஆலந்தூர் தலைமை அலுவலகத்திற்கு செல்லலாம் என்று கூறி இருவரும் நீர்வளத்துறை அதிகாரி அசோகன் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது நீர்வளத்துறை அதிகாரி செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை பற்றி பேசியதால் தன்னை போலி என்று கண்டுபிடித்து விட்டார்கள் என்று சூதாரித்துக்கொண்ட போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நுங்கம்பாக்கத்தில் காரை நிறுத்தும்படி கூறி அங்கேயே இறங்கிவிட்டு, நீங்கள் முதலில் அலுவலகத்திற்கு செல்லுங்கள் நான் பின்னால் வருகிறேன் என்று கூறிவிட்டு இறங்கி சென்றுள்ளார்.

இதுகுறித்து போலீசாரை வைத்து ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதும், வந்தவர்கள் பணம் பறிக்கும் போலியான நபர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அசோகன் தரமணி காவல் நிலையத்தில் ஆய்வாளர் பழனியிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் உதவி ஆணையர் ஜீவானந்தம் மேற்பார்வையில் ஆய்வாளர் பழனி தலைமையில் காவலர்கள் மகேஷ், ஐசக், உதயகுமார், கர்ணா ஆகியோர் கொண்ட தனிப்படை ஒன்று அமைத்து அரசு அதிகாரிகளை குறிவைத்து போலி அதிகாரியை போல் பணம் பறிக்கும் அந்நபரை தேடி வந்தனர்.

அதில் சிந்தாரிப்பேட்டை வங்கியில் பணம் எடுக்க சிசிடிவி காட்சிகளை கைபற்றிய தனிப்படை போலீசார், அதை அடிப்படையாக வைத்து நேற்றிரவு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த 55-வயதான சின்னையன் என்பவரை அவரது வீட்டில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான சின்னையனை தரமணி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவர் கூறுகையில், “என் தந்தை வரதராஜலு வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். தந்தை இறந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு பணம் கஷ்டம் ஏற்பட்டது. அப்படியான சூழலில்தான் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீட்டில் சோதனை செய்ததை பார்த்தேன். அதிகாரிகளை போல் போலியாக சென்று அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டி கடந்த 22ம் தேதி இச்செயலலில் ஈடுபட்டேன்” என்றுள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், குடும்ப கஷ்டத்தால் செய்திகளை பார்த்து இப்படி செய்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவரை கைது செய்த தனிப்படையினைருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com