சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் பெண்ணின் புகைப்படங்கள்: உண்மை என்ன?

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் பெண்ணின் புகைப்படங்கள்: உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் பெண்ணின் புகைப்படங்கள்: உண்மை என்ன?

கூட்டுபாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணின் புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படுபவை போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 29 ஆம் தேதி, உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், கூட்டுபாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவத்தால் நாடே கொந்தளிப்பில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக செயற்பாட்டளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பும் இந்த கொடுமைக்கு எதிராக குரலெழுப்பிவருகின்றனர். இந்த சூழலில் உயிரிழந்த ஹத்ராஸ் பெண் என்ற பெயரில் சில புகைப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர். அந்த படங்கள் போலியானவை என்று ஒரு செய்திநிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தவறான புகைப்படத்தை சில பிரபலங்களும், பத்திரிகை வலைத்தளங்களும் கூட பகிர்ந்திருந்தனர். “உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு வைரலாகிவரும் இந்த படத்தை அனுப்பினோம். அந்தப் படம் தனது சகோதரியின் இல்லை என்று அப்பெண்ணின் சகோதரர் பதிலளித்தார். படத்தில் கரும்பு வயலில் நிற்கும் பெண் தற்போது உயிரிழந்த பெண் இல்லை என்பதை மற்ற குடும்ப உறுப்பினர்களும் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் வீடியோ க்ளிப்கள் சில எங்களுக்கு கிடைத்தன, அதில் அவர் தனக்கு நடந்த கொடூர சம்பவத்தை விவரிக்கிறார். மேலும் சம்பவத்திற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட அவரது சில படங்களும் எங்களுக்கு கிடைத்தன. இரண்டு படங்களையும் ஒப்பிடும்போது, அவை முற்றிலும் வேறுபட்டவை என்பதைக் கண்டோம்” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹத்ராஸில் உயிரிழந்த பெண் என்று பகிரப்படும் படத்தில் உள்ள பெண் மனிஷா யாதவ். உத்தரபிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த அவர் சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜூலை 22, 2018 அன்று உயிரிழந்துவிட்டார் என அப்பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com