"ஏம்மா இப்படியெல்லாமா மோசடி செய்வீங்க" விவசாயியிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது
திருமணமான பெண்ணை திருமணம் செய்து வைத்து நகை மற்றும் பணத்தை பறித்து குன்னத்தூர் விவசாயியிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த குன்னத்தூர் அருகே நல்லிக்கவுண்டம்பாளையம், செட்டி தோட்டத்தில் வசித்து வருபவர் மாரப்பன் என்பவரின் மகன் ராஜேந்திரன் (34). தனது தாய், தந்தையுடன் தங்கி விவசாயம் செய்து வரும் இவருக்கு கடந்த பல ஆண்டுகளாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சிறுவலூரைச் சேர்ந்த சந்திரன் என்பவரிடம் பெண் பார்க்கச் சொல்லியுள்ளார்.
இந்நிலையில், அரியலூரைச் சேர்ந்த வள்ளியம்மாள், தன் வீட்டுக்கு அருகே ரீசா என்ற பெண் உள்ளதாகவும், அவரது அக்கா தங்கம், பெரியம்மா தேவி ஆகியோர் வந்துள்ளதாகக் கூறி, ராஜேந்திரனை பெண் பார்க்க வரச்சொல்லியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன் கடந்த மாதம் 22-ம் தேதி ரீசாவை நிச்சயம் செய்துள்ளனர். உடனடியாக திருமணம் செய்து கொள் என பெண் வீட்டார் வற்புறுத்தியதால், கடந்த மாதம் 24-ம் தேதி திருமணம் செய்துகொள்ள ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து 24-ம் தேதி காலை பச்சாம்பாளையம் ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோயிலில் வைத்து ரீசாவை, ராஜேந்திரன் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்ததும் திருமண தரகு கமிஷனாக ரூ. 1லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் 25-ம் தேதி ராஜேந்திரன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தபோது காரை வரவழைத்த ரீசா, வீட்டிலிருந்து ராஜேந்திரன் போட்ட நகைகளுடன் மாயமானார். இதையடுத்து ராஜேந்திரன் சந்திரன் மூலமாக அரியலூரை சேர்ந்த தரகர் வள்ளியம்மாளை தொடர்பு கொண்டபோது உரிய பதில் இல்லை.
இதையடுத்து சந்திரன் அரியலூருக்கு சென்று விசாரித்தபோது, ரீசாவுக்கு ஏற்கெனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி திருமணம் செய்த ரீசா (27), தரகர்கள் அம்பிகா (38), வள்ளியம்மாள் (45), ரீசாவின் உறவினர் தேவி (55) மற்றும் தங்கம் (36) ஆகியோர் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் வேறு எங்கும் இது போன்ற மோசடியில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.