புதுச்சேரியில் முதியவர்களை ஏமாற்றி வங்கிக் கணக்கில் ரூ. 9 லட்சம் திருட்டு
புதுச்சேரியில் முதிய தம்பதியை தொலைபேசி வாயிலாக ஏமாற்றி அவர்களாது வங்கிக் கணக்குகளிலிருந்து சுமார் 9 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவனின் மனைவி கீதாவை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர், தன்னை இந்தியன் வங்கி மேலாளர் என்று அறிமுகபடுத்தி கொண்டுள்ளார். பின்னர் கீதாவின் ஏடிஎம் கார்ட்டை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி அவரது வங்கி கணக்கு விவரம் மற்றும் செல்போனுக்கு வந்துள்ள otp எண் போன்றவற்றை கேட்டுப் பெற்றுள்ளார். பின்னர் மூதாட்டியின் கணவர் வாசுதேவன் வீடு திரும்பிய பிறகு நடந்தவற்றை கேள்விப்பட்டவுடன் பரிசோதித்து பார்த்தபோது வங்கிக்கணக்கில் இருந்து 42 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது பற்றி புகார் அளித்த அடுத்த நாளே இருவரும் பயன்படுத்தும் கூட்டுக் கணக்கிலிருந்து எட்டரை லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. முதியவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.