போலீஸ் கெடுபிடி எதிரொலி: போதை மாத்திரையை நூதன முறையில் விற்பனை செய்யும் கும்பல்

போலீஸ் கெடுபிடி எதிரொலி: போதை மாத்திரையை நூதன முறையில் விற்பனை செய்யும் கும்பல்
போலீஸ் கெடுபிடி எதிரொலி: போதை மாத்திரையை நூதன முறையில் விற்பனை செய்யும் கும்பல்

Sterile water-ல் போதை மாத்திரைகளை கரைத்து ஊசியால் உடலில் செலுத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பெருநகரில் 'போதை தடுப்புக்கான நடவடிக்கை' மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று புது வண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா நகர் ரயில்வே கேட் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அபபோது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.

இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு போதை மாத்திரைகள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் வைத்திருந்த முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன், ஆந்திராவைச் சேர்ந்த கோபிநாத் சிங், கொடுங்கையூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து Tydol 200 200 மாத்திரைகள், Nitravet 315 மாத்திரைகள், Nitrosun 160 மாத்திரைகள், Spasmo Proxyvon 360 மாத்திரைகள் என மொத்தம் 1,035 போதை மாத்திரைகள், 6 Sterile water bottle, 86 Disposable syringe, 94 Disposable needles, 6 செல்போன்கள் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை முழுவதும் காவல்துறையினரின் அதிரடி சோதனையில் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதில் கைதான கும்பலுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போதை மாத்திரைகளை Sterile water-ல் கரைத்து வைத்து கொண்டு ஊசி மூலமாக உடலில் செலுத்தி போதையில் இருந்து வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Sterile water மூலம் ஊசியால் போதையை நீண்ட நேரமாக அனுபவிக்க முடிவதாகவும், மருத்துவ பரிசோதனை செய்தாலும் கண்டு பிடிக்க முடியாது என அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலத்தை கைதானவர்கள் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் முகப்பேரில் மெடிக்கல் வைத்திருப்பவர் பாலசுப்ரமணியன், இவரிடம் பணி செய்து வருபவர் பாண்டுரங்கன், ஆந்திராவில் மெடிக்கல் வைத்துள்ளவர் கோபிநாத். இவர்கள் 3 பேரின் உதவியால் சந்தோஷ் பெரம்பூர், வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் வசித்து வரும் சில இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை Sterile water-ல் கரைத்து கொடுத்து அதிக பணம் சம்பாதித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் கைதாகி உள்ள சந்தோஷ் Sterile water-ல் போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தலாம் என்பதை யூ-டியூப் மூலம் தெரிந்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே 2 அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com