துபாய் டூ பெங்களூரு | விமானத்தில் கடத்திவரப்பட்ட 3.995 கிலோ தங்கம் பறிமுதல்
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியது. இதையடுத்து இந்த விமானத்தில் வந்த பயணியரிடம், கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பார்வை மாற்றுத்திறனாளி ஒருவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் சோதனை செய்தனர்.
அப்போது, அவர் அணிந்திருந்த சட்டைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நபரிடம் இருந்து 3.44 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.995 கிலோ தங்கச் செயின்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் பார்வை மாற்றுத்திறனாளி என்பதால், இவரை பயன்படுத்தி தங்கக் கடத்தலில் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அவர், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை முடிந்த பின்னரே, இவரது பின்னணியில் இருப்பது யார் என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.