கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேவரபெட்டா கிராமத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் தப்பியோடியுள்ளார்.
யுகாதி பண்டிகையை ஒட்டி சகோதரர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது அண்ணன், தம்பி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஏற்பட்ட கைகலப்பில் ஆத்திரமடைந்த அண்ணன் சங்கரப்பா, வீட்டில் இருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து வந்து தம்பி கணேஷை சுட்டுள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சங்கரப்பா தப்பியோடியுள்ளார். அருகில் வசிப்பவர்கள் அளித்த தகவலை அடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய சங்கரப்பாவை தேடி வருகின்றனர்.