பீர்பாட்டிலால் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்த திமுக பிரமுகர் கைது
குடிபோதையில் உதவி ஆய்வாளரை பீர் பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த திமுக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கபாதை அருகே பக்கவாட்டில் உள்ள சர்வீஸ் சாலையில் சில இளைஞர்கள் 4ம் தேதி இரவு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அவ்வழியே பணி முடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ்(54) என்பவருக்கு வழிவிடாமல் சாலையிலேயே மது குடித்து அமர்களம் செய்துள்ளனர்.
ஹாரன் அடித்தும் நகராத மது போதை நபர்கள் பீர்பாட்டிலால் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்து விட்டு இருசக்கர வாகனத்தின் சாவி, செல்போன் ஆகியவற்றை பிடுங்கி சென்று விட்டனர். ரத்தம் கொட்ட கொட்ட உதவி ஆய்வாளர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தலையில் 10 தையல் மற்றும் இடது கண் புருவத்தின் அருகே 3 தையல் போடப்பட்டு உள்ளது. சிகிச்சைக்கு பின்னர் இது குறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் 341, 294(b), 324, 332, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போதை ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மோகன்தாசை தாக்கியது ஆலந்தூரை சேர்ந்த 162 வட்ட இளைஞரணி திமுக துணை அமைப்பாளர் வினோத் தலைமையிலான குடிகாரர்கள் என தெரியவந்தது. அதனடிப்படையில் திமுக பிரமுகர் வினோத்குமார்(30), அஜித்குமார்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களையும் தேடி வருகின்றனர். குடிபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.