புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இறப்பு: விஷ ஊசி போட்டு தந்தையே கருணை கொலை செய்தாரா?

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இறப்பு: விஷ ஊசி போட்டு தந்தையே கருணை கொலை செய்தாரா?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இறப்பு: விஷ ஊசி போட்டு தந்தையே கருணை கொலை செய்தாரா?

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த சிறுவனொருவனை  அவனது தந்தையே விஷ ஊசி போட்டு கொன்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சிறுவனின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கச்சுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி - சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு செந்தமிழ், வண்ணத்தமிழ் என 2 மகன்கள் உள்ளனர். இதில் வண்ணத்தமிழுக்கு வயது 14. வண்ணத்தமிழுக்கு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் காலில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட போதும், கால் முறிவு குணமாகாமல் இருந்துள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக கோயமுத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர் அவரின் பெற்றோர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எலும்பு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான சிறுவனின் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். பின் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எலும்பு புற்றுநோயால் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்துள்ளார் வண்ணத் தமிழ். அவருக்கு தொடர்ந்து கோயமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வண்ணத் தமிழின் தந்தை பெரியசாமி லாரி ஓட்டுநர் என்பதால், மகனுக்கு தொடர்ந்து உயர் சிகிச்சை அளிப்பதில் அவருக்கு சிரமம் இருந்து வந்துள்ளது. இருந்தபோதிலும் தொடர்ந்து ஓய்வெடுக்காமல் தான் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது மகனுக்காக செலவு செய்து வந்துள்ளார். இருந்தபோதும் வண்ணத்தமிழ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் வண்ணத்தமிழின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு, அவரின் உடல் மிகவும் மோசமடைந்ததிருக்கிறது. தொடர்ந்து வண்ணத்தமிழ் இறந்து விட்டார். தனது மகனின் துடிதுடிப்பு கண்களால் பார்க்க இயலாமல், தந்தை பெரியசாமிதான் அவருக்கு விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்ததாக தகவல் வெளியானது.

இந்த தகவலை அடுத்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் வண்ணத் தமிழில் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, “இறப்பில் சந்தேகம் இருப்பதால் மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுவன் வண்ணத்தமிழ் உயிரிழப்பு கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தெரியவரும். அதன்பிறகு தந்தை பெரியசாமி மீதும் அவரது உறவினர் பிரபு மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும்” என தெரிவித்தனர்.

- பாலகிருஷ்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com