தருமபுரி: மக்னா யானையின் உடலை துளைத்த குண்டு... வசமாக சிக்கிய வேட்டைக்காரர்கள்

தருமபுரி: மக்னா யானையின் உடலை துளைத்த குண்டு... வசமாக சிக்கிய வேட்டைக்காரர்கள்
தருமபுரி: மக்னா யானையின் உடலை துளைத்த குண்டு... வசமாக சிக்கிய வேட்டைக்காரர்கள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து நான்கு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்னா யானை ஒன்று மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் ஒகேனக்கல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மக்னா யானையின் உடலை மீட்டு, அதே இடத்தில் மருத்துவக் குழுவினரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் மக்னா யானையின் உடலில் துப்பாக்கி குண்டு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கிகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியைச் சேர்ந்த சண்முகம், கமலேசன், குணசேகரன், சிவக்குமார் ஆகிய நான்கு பேர் நாட்டு துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு, இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் ஒகேனக்கல் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மக்னா யானையை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து நான்கு பேரையும் ஒகேனக்கல் வனத் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து நான்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் குண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com