Accused
Accusedpt desk

தருமபுரி: சட்ட விரோதமாக ஸ்கேன் மூலம் கருவிலேயே பாலினம் கண்டறிந்த கும்பல் மீது பாய்ந்தது குண்டாஸ்!

பென்னாகரம் அருகே சட்ட விரோதமாக ஸ்கேன் மெஷின் வைத்து, வீட்டிலேயே கர்பிணிகளுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த இரண்டு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
Published on

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி அடுத்த முத்தப்பா நகரில் வீட்டிலேயே பாலினம் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, கடந்த மாதம் 27ஆம் தேதி கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த கும்பலை, தருமபுரி மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர், மருத்துவர்.சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பிடித்தனர்.

இதில், இண்டூர் அடுத்த நத்ததள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமையலறாக பணியாற்றி வரும் லலிதா என்பவர் இடைத்தரகராக இருந்து, கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து, கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் முறையான மருத்துவம் படிக்காமல் ஸ்கேன் இயந்திரம் வைத்து வீட்டிலே பெண்களுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்தும், அதனை சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Illegal scan
Illegal scan pt desk

இதனைத் தொடர்ந்து இடைத்தரகர் லலிதா, ஸ்கேன் செய்து கருவின் பாலினம் தெரிவித்த முருகேசன் மற்றும் நடராஜன், சின்னராஜ் ஆகிய நான்கு பேரையும் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து பணம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்ற சட்ட விரோதமாக கருவின் பாலினம் கண்டறிந்து சொல்லுதல், கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபடுதல் போன்றவற்றை தடுப்பதற்காக, இந்த கும்பலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்திக்கு பரிந்துரை செய்தார்கள்.

Accused
கும்பகோணம்: தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி மர்ம மரணம் - எஸ்கேப் ஆக முயன்ற இளைஞர்! விபத்தா? கொலையா?

இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், சின்னராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைச் சாலையில் இருந்து வரும் நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை மத்திய சிறைச் சாலையில் உள்ள கைதிகளிடம் காவல் துறையினர் வழங்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com