அதிர்ச்சி கொடுக்கும் கூட்டுறவு வங்கி நகைக்கடன் மோசடி: எந்தெந்த மாவட்டங்களில்? - முழுவிவரம்

அதிர்ச்சி கொடுக்கும் கூட்டுறவு வங்கி நகைக்கடன் மோசடி: எந்தெந்த மாவட்டங்களில்? - முழுவிவரம்

அதிர்ச்சி கொடுக்கும் கூட்டுறவு வங்கி நகைக்கடன் மோசடி: எந்தெந்த மாவட்டங்களில்? - முழுவிவரம்

தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நகைக்கடன்கள் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகைக் கடன்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. போலி நகைகளை அடமானமாக வைத்து நகைக் கடன்களை பெற்றிருப்பதாகவும், நகைகளை அடமானம் பெறாமல், நகைகளை அடமானம் வைத்துள்ளதாக ஏமாற்றி நகைக்கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் இதுதொடர்பாக முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடியின்போது நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமான நிலையில் தற்போது நகைக்கடன் தள்ளுபடியிலும் அம்பலமாகியுள்ளது.

நகைக்கடன் முறைகேடுகள் நடந்தது எப்படி?

  • ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக் கணக்கில் பல நகைக்கடன்களை பெற்றுள்ளனர்.
  • ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் பல கூட்டுறவுச் சங்கங்களில், பல நகைக் கடன்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
  • வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகைக் கடன்கள் பெற்றுள்ளனர்.
  • போலி நகைகளை அடமானமாக வைத்து நகைக் கடன்களை பெற்றுள்ளனர்.
  • நகைகளை அடமானம் பெறாமல், நகைகளை அடமானம் வைத்துள்ளதாக ஏமாற்றி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன
  • திருத்தங்கள் அல்லது இடைச்செருகல் மூலம் சில உறுப்பினர்கள் பெயர்களை சேர்த்து நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஒரு கிராமுக்கு அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது
  • நகைகளே இல்லாமல் ஏட்டளவில் நகைக்கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
  • போலி நகைகளுக்கு நகைக் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மோசடி?

தூத்துக்குடியில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் 261 பொட்டலங்கள் ஆய்வின் போது நகைகள் இருப்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் குரும்பூரில் நகைகள் இருப்பில் இல்லாத பொட்டலங்களின் நகைக் கடன் மதிப்பு ரூ.1.98 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாக குழு இயக்குநர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி அங்கு ஆய்வு நடத்தியதில், சுமார் ரூ.11.33 லட்சம் கடனை பெற அவர் அளித்த அடமான நகைகளும் கவரிங் நகைகள் என ஆய்வில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 16ஆம் தேதிமுதல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இயக்குநர் தவிர திருத்தங்கள் அல்லது இடைச்செருகல் மூலம் சில உறுப்பினர்கள் பெயர்களை சேர்த்து போலி நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றதும் தெரியவந்திருக்கிறது. இதற்கு அங்கிருந்த ஊழியர்கள் மூன்று பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் பாப்பையாபுரம் மற்றும் சுந்தரலிங்கபுரம் ஆகிய இரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ஒரே நபர் 40 சரவனுக்கும் அதிகமான நகைகள்மீது 70 லட்சம் ரூபாயை 300க்கும் மேற்பட்ட நகைக்கடன்களில் பெற்றிருப்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நபர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரை உசிலம்பட்டி வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் ஒரே அந்தியோதயா மற்றும் அன்னயோஜனா குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை அடமானம் வைத்து 37 லட்சம் ரூபாய் நகைக்கடன் பெற்றது தெரியவந்துள்ளது. இதில் 33 லட்சம் 40 கிராமுக்கு உட்பட்ட நகைக்கடன்களாகவும், இவை நாகை மாவட்டத்திற்குரிய குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி வழங்கப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிராமுக்கு அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது.

நகைக்கடனில் நடந்த குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்த மாவட்டவாரியான விவரமும் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், முறைகேடுகளில் ஈடுபடுவோர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com