பணத்தை திருடியிருப்பார் என்கிற சந்தேகத்தில் வாய்பேச முடியாத தலித் இளைஞரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்து கரன்ட் ஷாக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்ஷ்மிபுர் கெரி மாவட்டத்தில் உள்ள நிஹாசன் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ்குமார். வயது 28. வாய்ப்பேச முடியாத மற்றும் காது கேளாதவரான இவர், யோகேஷ் வர்மா என்பவரிடம் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்துவந்தார். கடந்த வியாழக்கிழமை இவரைக் காணவில்லை. வீட்டில் உள்ளவர்கள் தேடினர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுயநினைவற்ற நிலையில், நியூ பாஸ்டி கிராமத்தில் சாலையில் கிடந்துள்ளார். அங்குள்ளவர்கள் உதவியுடன் சுயநினைவுக்குத் திரும்பிய அவர், வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.
பணத்தைத் திருடியதாக சந்தேகப்பட்ட யோகேஷ் வர்மா, தன்னை அடித்து உதைத்ததாகவும் நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பில் கரன்ட் ஷாக் கொடுத்தது துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார். அவர் உடல்நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இதையடுத்து அவரை அங்குள்ள கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஹெல்த் சென்டரின் டாக்டர் அருண்குமார் கூறும்போது, ‘அவர் உடலில் சில பகுதியில் தீ காயம் இருக்கிறது. அவர் டார்ச்சர் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தெரிகிறது. மெடிக்கல் ரிப்போர்ட்டை போலீசிடம் ஒப்படைத்துவிட்டோம்’ என்றார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் யோகேஷை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.