ஆட்டின் தலையுடன் போலீஸில் புகார்: காணாமல்போன ஆடுகளை மீட்ட விவசாயி

ஆட்டின் தலையுடன் போலீஸில் புகார்: காணாமல்போன ஆடுகளை மீட்ட விவசாயி
ஆட்டின் தலையுடன் போலீஸில் புகார்: காணாமல்போன ஆடுகளை மீட்ட விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் விவசாயி ஆட்டு தலையுடன் காவல்நிலையம் வந்து புகார் அளித்ததோடு எஞ்சிய ஆடுகளையும் மீட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, கரம்பக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக பல ஆடுகள் இரவு நேரங்களில் திருடப்பட்டு வந்துள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வரும் திருடர்கள், சாலை ஓரங்களில் உள்ள வீடுகளில் நிற்கும் ஆடுகளை திருடிச் சென்று விடுவதாக தொடர்ந்து கீரமங்கலம் மற்றும் வடகாடு காவல் நிலையங்களில் புகார்கள் வந்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு 3 ஆடுகளுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேகமாக கீரமங்கலம் - குளமங்கலம் சாலையில் சென்றபோது பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் வானத்தை நிறுத்தாததால் அவர்களை துரத்திச் சென்றுள்னர். ஆனால் அவர்கள் இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். 


இதேபோல கீரமங்கலத்தில் சந்திரசேகர் என்பவர் வீட்டில் கட்டியிருந்த 2 ஆடுகள் நேற்று இரவு திடீரென காணாமல் போயுள்ளது. இதனையடுத்து இன்று காலை கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒவ்வொரு கறிக் கடைக்கும், சந்திரசேகரும் அவரது நண்பர்களும் திருடுபோன ஆடுகளை தேடிச் சென்றுள்ளனர்.

அப்போது வேம்பங்குடி மேற்கு பகுதியில் உள்ள கறிக்கடையில் காணாமல்போன ஆட்டுத் தலையும் கால்களும் இருப்பதைப் பார்த்த சந்திரசேகர், ஆட்டுத் தலையை எடுத்துக் கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளனர். அதிகாலையில் காணாமல்போன எங்கள் இரண்டு ஆட்டில் ஒன்று கறிக்கடையில் அறுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆடு திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தனர். 


சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் திருட்டு ஆட்டை வாங்கி கறிக்கடை நடத்தியவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தபோது, சிலர் இந்த ஆடுகளை கொண்டு வந்து விற்றதாகவும் திருட்டு ஆடுகள் என்பது தெரியாது என்றும் விசாரணையில் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து சில ஆடுகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் ஆடுகளை திருடி கறிக்கடைகளில் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களை கீரமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து விசாரணை செய்யும்போது மேலும் திருடப்பட்ட ஆடுகள் பற்றிய விபரம் தெரியவரலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆட்டுத் தலையை வைத்து திருட்டை கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com