காதலிக்க மறுத்த மாணவி வெட்டி படுகொலை... குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞர் தப்பி ஓட்டம்

காதலிக்க மறுத்த மாணவி வெட்டி படுகொலை... குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞர் தப்பி ஓட்டம்
காதலிக்க மறுத்த மாணவி வெட்டி படுகொலை... குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞர் தப்பி ஓட்டம்

புதுச்சேரியில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை அவரது தாயின் கண்முன்னே கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய இளைஞரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி, திருபுவனை பகுதியை அடுத்த சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மூன்றாவது மகள் கீர்த்தனா (வயது 18). கீர்த்தனா கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள (காமராஜர்) அரசு கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இவரை நாகராஜனின் உறவினரான முகேஷ் (வயது 22) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். முகேஷூக்கு மது, புகை, கஞ்சா பழக்கங்கள் இருந்துள்ளது. மட்டுமின்றி, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகவும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என சொல்லப்படுகிறது.

இதை அறிந்த மாணவி கீர்த்தனா, முகேஷிடம் பேசுவதை தவிர்த்தாகவும், கல்லுாரிக்கு பேருந்தில் செல்லும் கீர்த்தனாவை, தினந்தோறும் முகேஷ் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று, காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து அந்த காதலுக்கு கீர்த்தனா மறுப்பு தெரிவித்ததால், அடிக்கடி தகராறு செய்து, `என்னைத் தவிர வேறு யாரிடமாவது பேசினால் கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை கல்லுாரி முடிந்து வந்த மாணவி கீர்த்தனா, பேருந்தில் வீடு திரும்பியநேரத்தில் கீர்த்தனாவுக்கு மீண்டும் தொல்லை கொடுத்திருக்கிறார் முகேஷ்.

கீர்த்தனாவை எதிர்பார்த்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த முகேஷ் கீர்த்தனாவிடம் சென்று , 'என்னை காதலிக்கிறேன் என்று சொல்லாவிட்டால், கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டியதாக தெரிகிறது. கீர்த்தனா அதை பொருட்படுத்தாமல் தனது தாயாருடன் புறப்பட முயன்றபோது, அப்போது பேசிக்கொண்டே பின்னால் வந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை, கால் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்திருக்கிறார். இதைப்பார்த்து கீர்த்தனாவின் தாயார் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்ததால், முகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில், திருபுவனை போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவியை தனது தாயார் கண் முன்னே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தப்பி ஓடிய முகேஷை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். கல்லூரி மாணவி கொலை வழக்கில் தேடப்படும் முகேஷ் மீது, ஏற்கெனவே திருவண்டார் கோயில் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com