ஆவடி அருகே பொறியியல் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆவடி அடுத்த வீராபுரம் கிரிஜா நகரைச் சேர்ந்தவர் பிரதீப் (21). கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வரும் இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.பின்னர் இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கல்லூரி மாணவியை அடிக்கடி மிரட்டி வெளியே அழைத்துச் சென்று, பிரதீப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை வெளியே சொன்னால் உனது தாய் மற்றும் தம்பியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் கல்லூரி மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து மன உளைச்சல் அடைந்த மாணவி, இது குறித்து ஆவடிடேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.