”என் மனைவியை கொலை செய்துவிட்டேன்” - மதுபோதையில் நண்பர்களிடம் உளறிய காதல் கணவன்
சுந்தராபுரம் அருகே திருமணமாகி சில மாதங்களேயான நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் கணவன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகர்ஜுனன் (30) என்பவரும், இந்திரா நகரைச் சேர்ந்த ஷர்மிளா (27) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் நாகர்ஜுனன், மனைவி ஷர்மிளாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதையடுத்து மது போதையில் இருந்த நாகர்ஜுனன் தனது மனைவியை கொன்று விட்டதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதை உறுதி செய்த நண்பர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நாகர்ஜுனனை கைது செய்த போத்தனூர் போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.