கோவை: சுமார் 13.5 கிலோ தங்க ஆபரணத்தை கையாடல் செய்தததாக வடமாநிலத்தவர் கைது
தங்க நகை கையாடல் வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்த நகை கடை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது அன்மோல் என்ற நகைக்கடை. தமிழ்நாட்டில் பிரபலமாக இயங்கி வரும் நகைக் கடைகளுக்கு தங்க ஆபரணங்கள் தயாரித்து மொத்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நகைக்கடையில், மார்கெட்டிங் மேலாளராக பணியாற்றிய ராஜஸ்தானைச் சேர்ந்த அனுமன் துவேசி என்பவர், பெங்களூரில் உள்ள அன்மோல் ஜுவல்லரியில் இருந்து கோயம்புத்தூரில் இயங்கும் நகைக் கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 10-08-2022 முதல் 12-09-2022 வரை பெங்களூரிலிருந்து நகைகள் கோயம்புத்தூருக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்திருக்கின்றார். அப்போது அவர், நகைகளை ஆர்டர்கள் தந்த நகை கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் இருந்திருக்கின்றார். இதையடுத்து அன்மோல் ஜுவல்லரி உரிமையாளர் சக்னால் காட்ரி, அனுமன் தூவேசிடம் நகைகளின் விநியோகம் குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், அனுமன் துவேசி முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த சக்னால் காட்ரி, நகை கையாடல் செய்யப்பட்டதை அறிந்து ரூ.6.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்கத்தை கையாடல் செய்ததாக வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, சிட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து நகை கையாடல் குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை ஊழியர் அனுமன் துவேசியை கைது செய்த தனிப்படை போலீசார், சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து அவரிடமிருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடையின் முன்னாள் ஊழியர் தல்பத் சிங் என்ற நபரை தேடி தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணையில் இறங்கியிருக்கின்றனர்.