அரக்கோணத்தில் இரட்டைக்கொலை: 6 பேர் கைது; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

அரக்கோணத்தில் இரட்டைக்கொலை: 6 பேர் கைது; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி
அரக்கோணத்தில் இரட்டைக்கொலை: 6 பேர் கைது; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

அரக்கோணம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணத்தை அடுத்துள்ள சோகனூர் காலனியில் நேற்று முன்தினம் இரவு முன் விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அர்ஜுன், சூர்யா ஆகிய இருவரும் உயிரழந்தனர். சௌந்தரராஜன், மதன் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரது மகன் சத்யா (28). இவர் தலைமையில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி மற்றும் அரிவளால் இருவரை வெட்டி கொலை செய்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழ்ந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. இதனால் கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது. அதேபோல அர்ஜுனனுக்கு திருமணமாகி எட்டு மாத கைக்குழந்தையுடன் அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவரது சடலத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இரு பிரிவினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சத்தியாவை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், 500-க்கும் மேற்பட்டோர் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. தாக்கியவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தவர்கள் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமூக கலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நேற்று விடிய விடிய பதட்டமான சூழ்நிலை நிலவியது.

குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திருக்கு அரசு பணி வழங்க வேண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறி தொடர்ந்து மூன்றாவது நாளாக சோகனூர் மக்கள் குருவராஜாபேட்டை - திருத்தனி சாலையில் பந்தல் அமைத்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூரில் நேற்று முன்தினம் (07.04.2021) முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சோகனூர் பகுதியை சேர்ந்த அர்சுனன், சூர்யா ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். இரட்டைக் கொலை சம்பந்தமாக 6 வது நபர் கைது. ஏற்கனவே அஜித், மதன், புலி (எ) சுரேந்தர், நந்தகுமார் என 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கார்த்திக், சத்யா ஆகிய இருவர் என மொத்தம் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறை நடுநிலையோடு செயல்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்“ என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 3 வது நாளாக போராடி வரும் பொது மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திரைபட இயக்குனர் பா.ரஞ்ஜித் நேரில் ஆதரவு அளித்தார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com