உறவினர்களே பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரம்: பரிதாபமாக மரணமடைந்த சிறுமி !

உறவினர்களே பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரம்: பரிதாபமாக மரணமடைந்த சிறுமி !
உறவினர்களே பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரம்: பரிதாபமாக மரணமடைந்த சிறுமி !

உறவினர்களால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 5 வயது சிறுமி, உடல் நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கே.கே நகரரைச் சேர்ந்த தம்பதியருக்கு 10 மற்றும் 5 வயதில் 2 மகள்கள், ஒரு வயது மகன் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் வீட்டின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூப்பர்வைசர் மற்றும் வீட்டு வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இரவு இரண்டாவது மகள் கழிவறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த தாய் கழிவறைக்கு சென்று பார்த்தபோது மகள் மயங்கி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அசோக் நகர் உதவி ஆணையர் பிராங்க் ரூபன் கே.கே நகர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் தாயிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், "எனது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம். ஏற்கெனவே உறவினர் ஒருவரை திருமணம் செய்து அவர் மூலம் எனக்கு 2 மகள்கள் பிறந்தார்கள். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து விட்டேன். 2 குழந்தைகளையும் தாய் வீட்டில் விட்டுவிட்டு பாண்டிச்சேரி சென்றேன். அங்கு ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்தபோது உடன் பணிபுரிந்து வந்தவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.

அவர் மூலம் ஒரு மகன் உள்ளான். கடந்த ஆண்டு குழந்தைகளை பார்க்க ஊருக்கு சென்றேன். அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எனது உறவினர்களால் பாலியல் ரீதியாகப் துன்பறுத்தப்பட்டு வருவதாக மகள் என்னிடம் கூறி அழுதார். மேலும், இதுபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

உறவினர்களால் எனது மகள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் மனமுடைந்த நான் மகளை என்னுடன் பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியில் படிக்க வைத்து வந்தேன். பள்ளிக்கு சென்ற இரண்டாவது மகள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை கண்ட பள்ளி ஆசிரியை மகளிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறினார். அதிர்ச்சி அடைந்த ஆசிரியை பள்ளி நிர்வாகம் மூலம் பாண்டிச்சேரி "சைல்டு லைனுக்கு" தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் என்னிடம் வந்து விசாரணை நடத்தினர். பாலியல் ரீதியாகப் துன்புறுத்தப்பட்ட கொடூர சம்பவங்கள் தெரிந்ததும் உடனடியாக மகள் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய பாண்டிச்சேரி போலீசார் பிரம்மதேசம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எனது மகள்களை பாலியல் ரீதியாகப் துன்புறத்திய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 16 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் அனைவரும் ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் உறவினர்கள் மூலம் எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் கணவர் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தேன்" என தெரிவித்துள்ளார். மேலும், பாலியல் ரீதியாகப் துன்பறுத்தப்பட்ட சிறுமி அடிக்கடி வயிற்று வலியால் துடித்து வந்ததாகவும், இந்நிலையில் தான் மகள் நேற்று கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்து இறந்ததாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com