3 வயது குழந்தையை தண்ணீரில் மூழ்க்கடித்து கொன்ற பெண் கைது
சென்னை வில்லிவாக்கத்தில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது பெண் குழந்தையை பக்கத்து வீட்டுப் பெண், தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வில்லிவாக்கம் பாரதி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் - ஜெயந்தி தம்பதியின் 3 வயது பெண்குழந்தை நேற்று முன்தினம் மாலை காணாமல் போனது. வீட்டுக்கு உள்ளே வைத்து வெளிப்பக்கமாக தாழிட்டுவிட்டு கடைக்கு சென்று ஜெயந்தி திரும்பி வருவதற்குள் குழந்தை காணாமல் போன நிலையில், வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள குப்பைமேட்டில் குழந்தை காவ்யாவின் உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில், வெங்கடேசன் மனைவி ஜெயந்திக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தேவி என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் குழந்தையை அவர் கொலை செய்திருக்கலாமென குழந்தையின் பெற்றோர் போலீஸாரிடம் தெரிவித்திருந்தனர். இந்த கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, பக்கத்துவீட்டுப்பெண் தேவிதான் குழந்தை காவ்யாவை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.