கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி - இரு இளைஞர்கள் கைது
தாம்பரம் அருகே கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் புதுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (47), தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், நேற்றிரவு சோமங்கலத்தில் இருந்து தாம்பரம் நோக்கி கிஷ்கிந்தா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வசந்தம் நகர் மதுபான கடை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆறு பேர் வெங்கடேசனை வழிமறித்துள்ளனர்.
இதனால், வெங்கடேசன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை மடக்கிப் பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து 1500 ரூபாய் பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வெங்கடேசன் தாம்பரம் காவல்நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தருண் (22), மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் மேத்யூ (20), ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.