அமெரிக்காவிலிருந்து வந்த மையிலாப்பூர் தம்பதியர் நகைக்காக கொலை- விசாரணையில் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவிலிருந்து வந்த மையிலாப்பூர் தம்பதியர் நகைக்காக கொலை- விசாரணையில் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவிலிருந்து வந்த மையிலாப்பூர் தம்பதியர் நகைக்காக கொலை- விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மயிலாப்பூரில் தம்பதி கொலை வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் உட்பட இருவரை 5 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த ஶ்ரீகாந்த் (60) அனுராதா (55) தம்பதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வசிக்கும் தங்களது மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்க்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஶ்ரீகாந்த், நேற்று அதிகாலை தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்துள்ளார்.



இதையடுத்து இவர்களை அழைத்துச் செல்ல ஸ்ரீகாந்துக்கு சொந்தமான மகாபலிபுரம், நெமிலிச்சேரில் உள்ள பண்ணை வீட்டில் தோட்டகரராக வேலை செய்யும் சர்மா என்பவரின் மகன் கிருஷ்ணா என்பவர், சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் சஸ்வத் தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, ஸ்ரீPகாந்த் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிவிட்டதாகவும், தங்களை அழைத்துச் செல்ல கார் ஓட்டுநர் கிருஷ்ணா வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சஸ்வத் மீண்டும் காலை 8.30 மணியளவில் தனது பெற்றோரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே கார் ஓட்டுநர் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டபோது, இருவரும் வீட்டில் தூங்குவதாகவும் அவர்கள் எழுந்த பிறகு தகவல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சஸ்வத் சிறிது நேரம் கழித்து மீண்டும் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டபோது கிருஷ்ணா முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளார். சந்தேகமடைந்த சஸ்வத் தனது உறவினர் ரமேஷ் பரமேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்து மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். உடனே ரமேஷ் பரமேஸ்வரன் தனது நண்பர் ஸ்ரீநாத் என்பவருடன் சேர்ந்து மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீகாந்த் வீட்டிற்குச் சென்று கதவை தட்டியுள்ளார்.

அப்போது, கதவை யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சூட்கேஸ் திறக்கப்பட்ட நிலையில், லாக்கரிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், வீடு சந்தேகத்திற்கிடமாக டெட்டாலால் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த இன்னோவா காரும் காணாமல் போயிருப்பதும் தெரியவர சந்தேகமடைந்த ரமேஷ் பரமேஸ்வரன், கார் ஓட்டுநர் கிருஷ்ணா மீது சந்தேகமடைந்து இது குறித்து மைலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

மைலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், சம்பவயிடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கிருஷ்ணா மற்றும் காணாமல் போன காரை தேடிவந்தனர். மேற்படி வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், உத்தரவிட்டதன் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர் தெற்கு கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தனர்.

இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றவாளி தமிழகத்தை விட்டு நேபாளம் தப்பிச் செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல் உயரதிகாரிகள், ஆந்திர மாநில போலீசாரை தொடர்பு கொண்டு துல்லியாமாக இருப்பிடத்தை தெரிவித்ததன் பேரில். ஆந்திரா மாநிலம், ஒங்கோல் போலீசார் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ஆகிய இருவரையும் இன்னோவா காருடன் மடக்கிப்பிடித்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் குமரகுருபரன் தலைமையிலான காவல் குழுவினர் ஒங்கோலுக்கு விரைந்து சென்று பிடிபட்ட கிருஷ்ணா மற்றும் ரவியை சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில், இருவரும் தங்க நகைகளுக்கு ஆசைபட்டு ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரையும் மைலாப்பூர் வீட்டில் வைத்து கொலை செய்து, வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துள்ளதும், பின்னர் பிரேதங்களை காரில் ஏற்றி இறந்து போன ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நெமிலிச்சேரி பண்ணை வீட்டில் புதைத்து விட்டு காரில் தப்பியதாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 1,000 சவரன் தங்க நகைகள், சுமார் 50 கிலோ வெள்ளி பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் இன்னவோ கார் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை வழக்குப் பதிவு செய்த மைலாப்பூர் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com