சென்னை: பேருந்தில் பயணிக்கும் முதியவர்களை குறிவைத்து திருடும் கும்பல் - இருவர் கைது
சென்னையில் பேருந்தில் பயணிக்கும் முதியவர்களை குறிவைத்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபடும் இரு ஆந்திர மாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கிண்டி பேருந்து நிலையம் அருகே முதியவர் ஒருவரிடம் உடமைகளை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது தெலுங்கு பாஷை பேசியும், முன்னுக்குப் பின் முரணாகவும் பதிலளித்தனர்.
இதனையடுத்து அவர்களின் பையை சோதனை செய்தபோது அதில் 7 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 2 பேரும், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) மற்றும் நம்முலு ராஜ் (47) என்பதும் தெரியவந்தது.
கொத்தனார் வேலை செய்துவரும் இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களில், முதியவர்களை குறிவைத்து திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீசார் அவர்களிடம் மேலும் எங்கெல்லாம் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் எனபது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.