சென்னையில் அடுத்தடுத்து 15 குற்ற சம்பவங்கள் - கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

சென்னையில் அடுத்தடுத்து 15 குற்ற சம்பவங்கள் - கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
சென்னையில் அடுத்தடுத்து 15 குற்ற சம்பவங்கள் - கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

ஒரே மாதத்தில் 15 குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள், 300 சிசிடிவி ஆய்வுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் சிக்கியது எப்படி? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த 18 ம் தேதி இரவு திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கவிதா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவர் கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர்.

அதேபோல அதற்கு அடுத்த நாள் அண்ணாசாலை தர்கா பகுதியில் சாந்தி என்ற பெண்ணை தாக்கி 4 சவரன் தங்க நகையை இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அறுத்து சென்றனர். இதற்கு அடுத்தடுத்த நாட்களில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில் நகை பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

இதனை தடுப்பதற்காக திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கர், எழும்பூர் உதவி ஆணையர் ரகுபதி தலைமையிலான தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், அனைத்து நகை பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களும் ஒரே கும்பல் தான் என தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளையர்களை தேடிவந்த நிலையில், கொள்ளை கும்பலைச் சேர்ந்த சிறுவனை கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரன்நகர் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அது தொடர்பான தகவல்களை சேகரித்தனர். அப்போது கொள்ளை கும்பல் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று 3 கொள்ளையர்களை சாதுர்யமாக கைது செய்தனர்.

காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த கிருபாநந்தன் (19), ஆவடியை சேர்ந்த பால் சிவா என்ற சிவகுமார் (20), அயனாவரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் அண்ணா நகர், நுங்கம்பாக்கம், குமரன் நகர், திருவல்லிக்கேணி, எழும்பூர், துரைபாக்கம், செங்குன்றம், சூளைமேடு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் மற்றும் 15 பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்தது.

பொதுவாக இதுபோன்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கூட்டாஞ்சோறு குற்றவாளிகள் என அழைப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி சென்னையின் புறநகர் பகுதிகளில் தங்களுக்கு தெரிந்த இடத்தில் நிறுத்திவிட்டு ஒவ்வொரு கொள்ளைச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். பின் கொள்ளை சம்பவத்தில் கிடைத்த பொருட்களை விற்று அதில் வரும் பணத்தை வைத்து மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுடன் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 16 சவரன் நகைகள் மற்றும் 5 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com