சென்னை: ஜாமீனில் வெளிவந்தவர் கொலை...போலீசார் விசாரணை
சென்னையில் பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவகுமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சிவக்குமார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் மயிலாப்பூர், ஜாம்பஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு ஒன்றிற்காக தேடப்பட்டு வந்த சிவக்குமார் உத்தரமேரூரில் தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்தபோது, போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து அவரிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த சிவக்குமார் சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 2வது தெருவில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜஸ்டின் என்பவருக்கு குறைந்த காலக்கட்டத்தில் 10 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். அந்தக் கடன் தொகையை வாங்குவதற்காக ஜஸ்டினின் அலுவலகத்திற்கு சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் சிவக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அசோக் நகர் போலீசார் உயிரிழந்த மயிலாப்பூர் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஜாம்பஜாரை சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல வருடங்கள் கழித்து பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை காவல்துறை கணக்கெடுத்து வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில் மிக முக்கியமான ரவுடியாக பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

