காதல் விரக்தியில் இளம்பெண் தீ வைத்து கொலை: குற்றவாளி வாக்குமூலம்
சென்னை ஆதம்பாக்கத்தில் இளம்பெண் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், தன்னை காதலித்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தால் கொன்றதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் இந்துஜா. இவரது பள்ளிக் கால நண்பர் ஆகாஷ். இந்துஜா மீது ஒருதலைக் காதல் கொண்ட ஆகாஷ், அவரையும் காதல் செய்யுமாறு தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஆகாஷின் தொல்லை அதிகரித்து காணப்பட்டிருக்கிறது. ஆனால் இந்துஜா ஆகாஷின் காதலை ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆதம்பாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் காலனியில் உள்ள இந்துஜாவின் வீட்டுக்கு வந்த ஆகாஷ், அந்தப் பெண் மீதும் அவரது தாயார் மற்றும் சகோதரி மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது திட்டமிடப்பட்டு செய்த கொலை என காவல்துறையின் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஆகாஷ் சரணடைந்தார். விசாரணையில், ஆகாஷும், இந்துஜாவும் 5 வருடங்களாக காதலித்ததாக கூறியுள்ளார். தங்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரியும் என்றும், தனக்கு நிலையான வேலை இல்லை என்பதால் இந்துஜாவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முயன்றதாகவும் ஆகாஷ் கூறியுள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தியில் இந்துஜாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்றதாக ஆகாஷ் தெரிவித்துள்ளார்.