சென்னையில் கொலை முயற்சி.. அந்தமானில் பதுங்கல் - சாதூர்யமாக கைது செய்த போலீஸ்

சென்னையில் கொலை முயற்சி.. அந்தமானில் பதுங்கல் - சாதூர்யமாக கைது செய்த போலீஸ்
சென்னையில் கொலை முயற்சி.. அந்தமானில் பதுங்கல் - சாதூர்யமாக கைது செய்த போலீஸ்

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை அந்தமானில் வைத்து சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சின்னமலை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் செங்கல்பட்டு மாவட்ட புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியாக இருந்து பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது காஞ்சிபுரம் செய்யூர் பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சின்னமலையில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தின் 8வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வரும் ரஞ்சித்-க்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரஞ்சித்தின் மனைவிக்கு தெரிந்து இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேறொரு பெண்ணுடனான தொடர்பு பற்றி தனது மனைவியிடம் தனது கார் ஓட்டுநரான தி.நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் தான் கூறியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஓட்டுநர் ரஞ்சித்தை அழைத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதில் வலி தாங்க முடியாமல் ஓட்டுநர் ரஞ்சித் 8வது மாடியில் இருந்து கயிறு மூலம் 3 ஆவது மாடி வரை இறங்கி பின் அங்கிருந்து கீழே குதித்து தனது முதலாளியான ரஞ்சித்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

3 வது மாடியில் இருந்து கீழே குதித்த ஓட்டுநர் ரஞ்சித்துக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓட்டுநர் ரஞ்சித் அக்கம் பக்கத்தினரால் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை அளித்த தகவலின் அடிப்படையில் கிண்டி போலீசார் மருத்துவமனைக்குச் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ரஞ்சித்திடம் வாக்குமூலமும் புகாரும் பெற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ரஞ்சித்தை தேடி சின்னமலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ரஞ்சித்தின் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்ததில் அவர் அந்தமானுக்கு தப்பிச் சென்றதும், அங்கு தலைமறைவாக பதுங்கியிருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது. அதனடிப்படையில் அடையாறு துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அந்தமானுக்கு விரைந்து அங்கு குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை கைது செய்து அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று இன்று சென்னை அழைத்து வந்துள்ளனர். சென்னை அழைத்து வரப்பட்ட ரஞ்சித்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை கிண்டி போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com