சென்னை | ஏலச்சீட்டு நடத்தி ரூ.75 லட்சம் மோசடி - பெண் உட்பட இருவர் கைது
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை அடுத்த பள்ளிக்கரணை ஜல்லடியான்பேட்டை சுப்ரமணி நகர் 1வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (35), வீராத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அசோக் குமார் (33), இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை பகுதியில் மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு, தீபாவளி சீட்டு, மகளிர் சுய உதவிக் குழுவும் நடத்தி வந்துள்ளனர்.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால், சீட்டு முடிந்த பிறகு சரிவர பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்று திருப்பி கொடுத்தவர்கள் பணத்தையும் வங்கியில் திருப்பி கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கபட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றபிரிவு ஆய்வாளர் தீபக் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோடிக் கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதில், பள்ளிகரணை காவல் நிலையத்தில் சசிகலா, சுமதி சக்திவேல், ராஜாத்தி, சத்தியா, ஷாலினி, காமேஷ், கன்னியாகுமரி, சண்முகம், பரமேஸ்வரி என 9 நபர்களின் புகாரில் மட்டும் 75 லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய், (75,33.500) ரூபாய் பணம் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.