சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த வீரராகவன் என்ற நபர் கடந்த 4-ஆம் தேதி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ‘நான் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர். லாரன்ஸின் அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுக்கிறோம். அதற்காக ரூ.8,675 பணத்தை அனுப்புங்கள்’ எனக் கூறினார்.
‘இந்த பணம் எதற்கு என்று கேள்வி கேட்க?’ என கேட்டபோது, அந்த நபர் ‘எங்களின் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் இந்த தொகையை செலுத்த வேண்டும்’ என தெரிவித்தார். அதனை நம்பிய போன் பே மூலம் பணத்தை அனுப்பினேன். பின் மீண்டும் என்னை தொடர்பு கொண்டு, ‘ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்தில் உங்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அதற்காக மேலும் ரூ.2,875 அனுப்புங்கள்’ என கூறியுள்ளார். அதனை நம்பி மீண்டும் பணத்தை அனுப்பினேன். பின் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் என்னை தொடர்பு கொண்ட அந்த நபர், ‘ரூபாய் 50,000 பணத்தை அனுப்பி வைத்தால் உங்கள் குழந்தையின் மொத்த படிப்பு செலவையும் எங்களின் தொண்டு நிறுவனம் பார்த்துக் கொள்ளும்’ என்றார். அதை நம்பி ரூ.50 ஆயிரத்தை செலுத்தினேன்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த 50,000 ரூபாய்க்குப் பிறகும், அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வீரராகவன், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரியின் அடிப்படையில் வழக்குப்பதிந்த எழும்பூர் போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மர்ம நபர் வேலூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் வேலூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.