சென்னை: சொத்துத் தகராறில் அண்ணனை கடத்தியதாக அதிமுக பெண் பிரமுகர் உட்பட 4 பேர் கைது

சென்னை: சொத்துத் தகராறில் அண்ணனை கடத்தியதாக அதிமுக பெண் பிரமுகர் உட்பட 4 பேர் கைது

சென்னை: சொத்துத் தகராறில் அண்ணனை கடத்தியதாக அதிமுக பெண் பிரமுகர் உட்பட 4 பேர் கைது
Published on

சொத்துத் தகராறில் அண்ணனை கடத்தி சென்ற அதிமுக பெண் பிரமுகர், கல்லூரி மாணவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன் (50). இவர் தனது தாய்க்கு சொந்தமான வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தரை தளத்தில் வசித்து வருகின்றனர். புருஷோத்தமனுக்கும் அவரது தங்கையும், அதிமுக கொளத்தூர் பகுதி 68 வது வட்ட செயலாளருமான வட்சலா (46) என்பவருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் தங்கை வட்சலா தனது அண்ணனுக்கு தெரியாமல் அவர் வசிக்கும் வீட்டில் காலியாக உள்ள அறையில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரை வாடகைக்கு குடியமர்த்தியுள்ளார். பின்னர் அந்த நபரை அங்கிருந்து அனுப்பி விட்டு வட்சலா தனது குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறியிருக்கிறார். இதனால் தனது தங்கையை வீட்டை விட்டு காலிசெய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் புருஷோத்தமன், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 5ஆம் தேதி புருஷோத்தமன் வேப்பேரி ரித்திடன் சாலை சந்திப்பில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அதிமுக கொடி கட்டிய காரில் வந்த தங்கை வட்சலா மற்றும் அவரது குடும்பத்தினர் புருஷோத்தமனை அடித்து உதைத்து, அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதையடுத்து ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த புருஷோத்தமன், நேற்று இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்துத் தகராறில் புருஷோத்தமனை அவரது தங்கையே காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வட்சலா, மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவரது கணவர் லோகநாதன் (50), கடல்வள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மகன் ஜெயராம் (21), தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மற்றொரு மகன் ருத்ரன்  உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் மீது 120(பி) - கூட்டு சதி, 294(பி) - ஆபாசமாக திட்டுதல், 341- சிறை வைத்தல், 323- காயம் ஏற்படுத்துதல், 363- கடத்தல், 506(2) - கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

- ஆர்.சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com