சென்னை | பணம் கேட்டு மிரட்டிய வழக்கு - பிரபல ரவுடி கைது
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் பிரபல ரவுடி விவேக்ராஜ் என்பவர் நேற்று நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளார். அப்போது பணம் கேட்டு மிரட்டியதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சேலையூர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ஏ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும், அவர் மீது 3 கொலை வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே விவேக் ராஜ் கைது செய்யப்பட்ட உடன் அவரது ஆதரவாளர்கள் 11 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பரப்பினர் அதில், மச்சான் போலீஸ் என்னை சுற்றிவளைத்து விட்டது எண்கவுண்டர் செய்ய போறங்க வீடியோவை எல்லோருக்கும் அனுப்பிடு என பதற்றத்தோடு கூறியுள்ளார். போலீசார் தரப்பில் இது பழைய வீடியோ எனவும் தற்போது வெளியிடப்பட்டது இல்லை என்றும் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.