சொந்த வீட்டில் 550 சவரன், லட்சக்கணக்கான பணம் திருட்டு: திருமணத்தை மீறிய உறவுக்காக விபரீதம்

சொந்த வீட்டில் 550 சவரன், லட்சக்கணக்கான பணம் திருட்டு: திருமணத்தை மீறிய உறவுக்காக விபரீதம்
சொந்த வீட்டில் 550 சவரன், லட்சக்கணக்கான பணம் திருட்டு: திருமணத்தை மீறிய உறவுக்காக விபரீதம்

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி, காதலிக்கு கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி பூவிருந்தவல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவர் தொழிலதிபராக இருக்கிறார். இவரது தம்பி ராஜேஸ் (வயது 37). இருவருமே தங்களின் மனைவி, குழந்தைகளுடன் தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இருவருமே பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.

இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து அவரது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை தேடியுள்ளார். அப்போது அது அங்கு இல்லையென தெரியவந்துள்ளது. இதையடுத்து ராஜேஸின் மனைவியான தமிழ்ச்செல்வியின் 200 சவரன் நகையும், 5 தங்கக் கட்டிகளும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது காதலிக்கு கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, அவருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி (வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதோடு வெளியூர் வரை சென்று சுற்றியுள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்ற சேகர் அவற்றை ஸ்வாதியிடம் கொடுத்திருக்கிறார். மேலும் 30 லட்சம் வரை செலவும் செய்துள்ளார். அதேபோல் ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது” என்றனர்.

இப்படியாக போலீஸ் விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை அவர் திருடியது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com