சென்னை: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த நபர் கைது: 86 சவரன் நகை பறிமுதல்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நபர் கைது. 86 சவரன் தங்க நகை, 10,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், வ.உ.சி.நகர், பாலாஜி தெரு விரிவு பகுதியில் வசித்து வருபவர் சிவசண்முகம் (51), கட்டுமான நிறுவனம் வைத்து நடத்தி வரும் இவர், கடந்த மார்ச மாதம் 16 ஆம் தேதி கொல்கத்தா, டார்ஜிலிங் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவை முடித்துவிட்டு 23 ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பின்பக்க கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில், வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 34 சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சிசிசிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையனை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஞானமூர்த்தி (40), என்பதும் கடந்த 10 ஆண்டுகளாக இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வருவதும் தெரியவந்தது. இவர் மீது மடிப்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 86 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.