சென்னை: குற்றவழக்கு விசாரணையின் போது நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
குற்ற வழக்கு தொடர்பாக ஆஜர்படுத்த வந்தபோது நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் முஸ்பூர் ரகுமான் (45). இவருக்கும் நசரத்பேட்டையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், முஸ்பூர் ரகுமான் பெண் வழக்கறிஞரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்பூர் ரகுமானை கைது செய்தனர்.
பின்னர் அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள நீதிபதி தனஞ்செயன் வீட்டில் ஆஜர்படுத்த அவரை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது நீதிபதி, போலீசாரிடம் வழக்கு குறித்து விசாரித்தார். அந்த நேரத்தில் முஸ்பூர் ரகுமான், நீதிபதியை கைநீட்டி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் அவரை தடுத்துள்ளனர். அப்போது, முஸ்பூர் ரகுமான் போலீசாரின் கைகளை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை மடக்கிப்பிடித்த போலீசார், அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், நீதிபதியை மிரட்டியதாக நசரத்பேட்டை எஸ்ஐ. ரவிச்சந்திரன் புகார் அளித்தார். புகாரை அடுத்து மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முஸ்பூர் ரகுமானை கைது செய்தார். பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் நீதிபதி வீட்டில் மீண்டும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.