அம்பத்தூர் சுங்கசாவடி அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டில் டோல்கேட் அமைந்துள்ளது, இப்பகுதியில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்து பின்னர் செல்வார்கள்,
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன ஓட்டிகளிடம் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது போதையில் லாரி டிரைவர்களை விரட்டி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன், நகை போன்றவற்றை பறித்துச் சென்றனர்.
இதில், பாதிக்கப்பட்ட வடமாநில வாகன ஓட்டி ஒருவர் அம்பத்தூர் காவல்துறை குற்றப் பிரிவில் புகார் மனு அளித்தார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், மதனாகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (20), அமர்நாத் (20), சுதர்சன் (19) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது,
இதையடுத்து உடனடியாக காவல் ஆய்வாளர் அலமேலு தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.