ரூ.40 லட்சம் கேட்டு தன்னுடைய கணவரை கடத்திவைத்து மிரட்டுவதாக பெண் புகார் அளித்ததையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகியது.
சென்னை பெரியமேட்டை சேர்ந்த விக்ரம் ஜெயின் என்பவர் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அவரை மூன்று நபர்கள் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், ரூபாய் 40 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும், விக்ரம் ஜெயினின் மனைவி சந்திரா ஜெயின் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தியதில், கணவர் விக்ரம் ஜெயின் ரூ.44 லட்சம் பணத்தை கடனாகப் பெற்று அதனை கிரிப்டோ கரன்சியில் இழந்துள்ளார் என்பதும், பின்னர் ரூபாய் 44 லட்சம் பணம் கொடுத்த அசோக் பில்லரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் தனது பணத்தை திருப்பி கேட்டபோது, தானே ஆட்களை தயார் செய்து தன்னை கடத்தியதாக விக்ரம் ஜெயின் நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
முடிவில் விக்ரம் ஜெயின் இருக்கும் இடமறிந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், இன்று காலை விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.